வடமாகாண வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதி உறுதி
வடக்கு மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் மாவட்ட செயலகத்தில் இன்று (06.01.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய முன்மொழிவுகள்
இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், மீனவ சமூகம் மற்றும் விவசாயிகள் உள்ளடங்கிய சுமார் 300 பேர் கொண்ட குழு கலந்துகொண்டதுடன், தமது தொழில்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புதிய முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.
இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி சில பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கைத்தொழில்துறையினர் வடக்கு மாகாணத்திற்கு கைத்தொழில் வலயமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்குத் தேவையான காணியை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், வடக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிப்பதற்கு தொழில் துறைகளை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








