5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து பறிமுதல் (Photos)
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைக்காலமாக மஞ்சள், கஞ்சா, அபின் என்பவற்றை கடத்தும் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கடத்த இருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து இன்று கியூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கியூ பிரிவு பொலிஸ் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சுரேஷ் கந்தசாமி,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரி, தலைமை காவலர் ராமர், முதல்நிலைக் காவலர் இருதய ராஜ் குமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் இன்று காலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம் கடற்கரையில் ஒரு வள்ளத்தில் சரக்கு வாகனத்தில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பதை கண்டு அவர்களை சுற்றி வளைக்க முற்பட்ட போது அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான களைக்கொல்லி பூச்சி மருந்து உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 700 லீட்டர் களைக்கொல்லி பூச்சிமருந்து இருப்பதை கண்ட கியூ பிரிவு பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் வள்ளம் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடும் நடவடிக்கையினையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.