இ.போ.சபைக்கு நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா இழப்பு!போக்குவரத்து அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களால் முன்னெடுக்கப்படும் மோசடி நடவடிக்கைகள் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்து்ளார்.
இந்த நட்டமானது பொதுப் பணத்தின் பாரிய கசிவு எனச் சுட்டிக்காட்டினார்.
பேருந்துகள் மாத்திரமன்றி, இலங்கை போக்குவரத்து சபையின் முழுமையான நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் மனிதவளக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
20 மில்லியன் ரூபா இழப்பு
இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயமாக்கப்போவதாக வெளியாகும் வதந்திகளை அமைச்சர் திட்டவட்டமாக நிராகரித்தார்.

"நாங்கள் இலங்கை போக்குவரத்து சபையை விற்கப்போவதில்லை, மாறாக அதனை அபிவிருத்தி செய்வோம்" என அவர் உறுதியளித்தார்.
புதிய தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றமடைய விரும்பாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்தார்.
பணிப்புரை
ஊழலுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் புதிய விதிமுறைகளை உருவாக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை மீட்டெடுப்பதற்காக பாரிய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
"மாற்றமடையாதவர்கள் நீக்கப்படுவார்கள்" என எச்சரித்துள்ள அமைச்சர், ஊழலை ஒழிப்பதன் மூலமே பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.