மொட்டுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி தலைவி கைது...!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் அணி தலைவி காயா நேற்று(18) பிற்பகல் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல் வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் அணி தலைவி
அயல் வீட்டாரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு நேற்று(18) காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் விசாரணை நிறைவடைந்த பின்னர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் தடுப்பு காவல் வைப்பதற்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயல் வீட்டாருக்கும் குறித்த நபருக்கும் நீண்ட நாட்களாக இடம்பெற்ற தகராறு காரணமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரது கணவன் மீது அயல் வீட்டார் கடந்த 16 ஆம் திகதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த குறித்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
14 நாள் தடுப்பு காவல் உத்தரவு
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தாக்கியதாக அயல் வீட்டு பெண் ஒருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம்(17) வெளியேறியிருந்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் மீது பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளருடன் முரண்பாட்டில் ஈடுபட்ட அயல் வீட்டாரின் கணவன் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களுக்கு 14 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.