சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கு: இலங்கை பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்ய உத்தரவு
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படும் இலங்கை பொலிஸ் அதிகாரியை இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டார (35) கடந்த 05.09.2020ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
போதைப்பொருள் மாயம்
விசாரணையில் கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸார் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர். விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுபடி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டார ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
வழங்கப்பட்ட உத்தரவு
இந்த நிலையில் நேற்றுமுன் தினம் (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள், அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாமில் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார்.
அத்துடன் அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தியுள்ளார். எனவே விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்துள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.
மேலும் அவர் பொலிஸ் மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



