இராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதனாலே இலங்கை அரசாங்கம் வங்குரோத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு
இராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதனாலே இலங்கை அரசாங்கம் படுவங்குரோத்தில் இருக்கிறது என முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தின் தாக்குதல் வடக்கு, கிழக்கிலே அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. அதனை தட்டி கேட்பதற்கு இலங்கை அரசால் முடியாது.
அரசாங்கத்தின் நிலமை
ஐ.நாவிடம் கேட்கின்றோம் பிரிந்து செல்வதற்காக. இங்கு நடைபெறுவது அநீதி என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
அண்மையில் சுண்டிக்குளத்திலும் கடற்படையினால் தாக்கப்பட்டவர் உயிர் போகும் நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கின்றார். நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம்.ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் நிலைமை படுவங்குரோத்தில் இருப்பது இராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதனாலே.இராணுவத்தை குறைக்க வேண்டும். இராணுவத்தின் செயல் வன்மையாக கண்டிக்க கூடிய விடயம். ஆனால் இந்த பிள்ளைக்கும் தாய்க்கும் இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து பிள்ளை 18 வயது வரைக்கும் கொடுப்பனவு கொடுக்க வேண்டும்.
சர்வதேச நீதி
வீட்டினை பார்க்கும் போதே தெரிகிறது. அன்றாடம் கூலி வேலை செய்யும் ஒரு நபரே அடித்து சித்திரவதை செய்து குளத்தில் போட்டுள்ளது.ஆனால் இதை மாற்றிவிடுவார்கள். நீதி துறையில் உண்மையான சட்டத்தை கொண்டு வந்தால் கூட அவர்கள் தடுக்க படுகிறார்கள்.
முல்லைத்தீவில் நீதிபதி நீதி கொடுக்க முடியாமல் தப்பியோடியதும் தெரியும். ஆகவே இப்படியான செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதனை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துகின்றேன் என மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



