சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஒருதலைப்பட்ச நகர்வு
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய சபாநாயகர்கள் பலர் இருந்துள்ளனர். ஆனால், தற்போதைய சபாநாயகர் மிகவும் மோசமான முறையில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகின்றார். நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவர் ஒருதலைப்பட்சமாகவே நடந்துகொள்கின்றார்.
சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் ஒருவரே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இது பாரதூரமான விடயமாகும்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையின் ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். அந்தப் பேரவையின் தலைவராகச் சபாநாயகரே பதவி வகிக்கின்றார்.
தன்னால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆணைக்குழு, சபாநாயகருக்கு எதிராகச் சுயாதீனமான விசாரணையை முன்னெடுப்பது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.
எனவே, 'சட்டம் அனைவருக்கும் சமம்' என்பது உண்மையானால், இந்த விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.