நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் ஆயிரம் குடும்பங்களை இணைக்க பரிந்துரை: சிவசக்தி ஆனந்தன் (VIDEO)
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் பிரதேச செயலகத்துடன், அநுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைக்க அரசாங்க அதிபர் முன்மொழிவொன்றினை எல்லை நிர்ணயக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் (Sivasakthi Anandan) தெரிவித்துள்ளார்.
சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக வவுனியா வடக்கில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்லையின் ஒரு சிறு பகுதியை கூட்டுவதாக இருந்தாலும் சரி, குறைப்பதாக இருந்தாலும் சரி இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துக்கள், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் அறியப்பட வேண்டும்.
எனினும் எதையும் அறியாமல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக எல்லை நிர்ணயக்குழுவிற்கு, அநுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்மொழிவு அரசாங்க அதிபரினால் எல்லை நிர்ணயக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே திட்டமிடப்பட்டுள்ள இந்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும்படி இந்த பிரதேசத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம்
