சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர்: சிறீகாந்தா பகிரங்கம்
சிவாஜிலிங்கம் சொல்லும் ஒரு விடயத்தின் தர்க்கம் பற்றி கேள்வியெழுப்பலாம். ஆனால், அவரின் கட்சி விசுவாசம் பற்றி சந்தேகம் எழுப்ப முடியாது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சிக்குள் சில விவகாரங்கள் இருப்பது உண்மை. ஆனால், இந்த நிமிடம் வரை சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர். நான்தான் தலைவர். கட்சியின் விவகாரங்கள் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் இருவரில் ஒருவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என பகிரங்க கருத்தொன்றையையும் முன்வைத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர்
எனினும், பரவிய சில மணி நேரங்களிலேயே அந்த விடயம் கட்சி சார்பில் மறுக்கப்பட்டது. இந்தநிலையில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தன், சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என்று நேற்று(08.08.2023) செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அந்தக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சிவாஜிலிங்கத்துக்கு மதிப்புக்குரிய கடந்தகால வரலாறுள்ளது. அவர் சொல்லும் ஒரு விடயத்தின் தர்க்கம் பற்றி கேள்வியெழுப்பலாம். ஆனால், அவரின் கட்சி விசுவாசம் பற்றி சந்தேகம் எழுப்ப முடியாது.
கட்சிக்குள் சில விவகாரங்கள் இருப்பது உண்மை. ஆனால், இந்த நிமிடம் வரை சிவாஜிலிங்கமே கட்சியின் பொதுச்செயலாளர். நான்தான் தலைவர். கட்சியின் விவகாரங்கள் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் இருவரில் ஒருவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்.
கட்சியின் தலைமைக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒன்று கூடி சில விவகாரங்களைத் தீர்க்க முயன்றோம். அது கட்சிக்குள் நடக்கும் விவகாரம். அது பகிரங்கப்படுத்த வேண்டியதில்லை என்பதால் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை.
மேலும் இந்த விடயங்கள் கட்சிக்குள்ளேயே எம்மால் தீர்க்கப்படும்." என தெரிவித்துளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




