ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்த சிறுமிக்கு ஏற்பட்ட நிலை! - விசாரணைகள் தீவிரம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமியொருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதாரணபத்திரண இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான ஆரம்பகட்ட தகவல்களை தமது அதிகாரிகள் திரட்டி வருவதாகவும், அதன் பின்னரே முழுமையான தகவல்களை வெளியிட முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.
தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீக்காயங்கள் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஹட்டன் – அக்கரபத்தனை – டயகம பகுதியைச் சேர்ந்த வயது சிறுமியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வறுமை காரணமாக தனது கல்வியை 7ம் தரத்துடன் இந்த சிறுமி நிறுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
6 சகோதரர்களை கொண்ட குடும்பத்தில், மூன்றாவது பிள்ளையாக இந்த சிறுமி பிறந்துள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக இடைதரகர் ஒருவரின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு பணிக்காக இந்த சிறுமி அமர்த்தப்பட்டுள்ளதாக சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் சம்பள பணத்தை வீட்டிற்கு அனுப்பிய போதிலும், சிறுமியை பார்வையிட ஒரு முறையேனும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், தொலைபேசியூடாக இடைக்கிடை பேசுவதற்கான சந்தர்ப்பம் மாத்திரம் உறவினர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதாரணபத்திரண தெரிவித்துள்ளார்.