முல்லைத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் 29.04.2021 அன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் அன்று 29.04.2021 மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்ததோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்த நிலையில் முற்றாக எரிந்த ஒரு கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த தீவிபத்தின் போது முத்துஐயன் கட்டினை சேர்ந்த 72 அகவையுடைய செல்லப்பா
அரிராசசிங்கம் என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான்
பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு
மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த
நிலையில் இன்று (01) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.