பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : மாணவர்கள் மூவர் உயிரிழப்பு
மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் இரண்டு மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.
தலைநகர் மணிலாவுக்கு தென்கிழக்கே சுமார் 580 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெய்ட்டே தீவின் டக்லோபன் நகரில் அமைந்துள்ள சான் ஜோஸ் தேசிய உயர்நிலைப் பாடசாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று(22.06.2026)காலை 9 மணியளவில் அரங்கேறியுள்ளது.
பாதுகாப்பிற்காக கூடுதல் பொலிஸார் குவிப்பு
இச்சம்பவம் தொடர்பாக அதே பாடசாலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 38 ரக மற்றும் 9மிமீ துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்த டக்லோபன் நகர காவல்துறைத் தலைவர் நோயலிட்டோ கெடிகன், கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவன் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்றும், மற்றொரு மாணவன் பொலிஸாரிடம் தானாக முன்வந்து சரணடைந்ததாகவும் கூறினார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பிற்காக கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதாகவே நடக்கும் பிலிப்பைன்ஸில், இந்த கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறைக்கு கடுமையான கண்டனம்
இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து உடனடியாக விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அலுவலகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ள அந்நாட்டு கல்வி அமைச்சு, இந்த வன்முறைக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri