மூன்று துறைகளில் சாதனை படைத்த திருகோணமலை சண்முகா மகளிர் கல்லூரி
வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி உயிரியல், கணிதம் மற்றும் வர்த்தகம் ஆகிய மூன்று பிரதான பிரிவுகளிலும் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைக் கைப்பற்றிப் பாரிய சாதனை படைத்துள்ளது.
உயிரியல் பிரிவில் இக்கல்லூரி மாணவி தர்ஷனா கோணேஸ் 3A சித்திகளைப் பெற்று, திருகோணமலை மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தையும் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே 2023 சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் 6ஆம் இடத்தைப் பெற்றிருந்தார்.
கணிதப் பிரிவில் ஜஷிகா ராஜூ 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் மாவட்டத்தின் முதல் மூன்று இடங்களையும் சண்முகா மகளிர் கல்லூரி மாணவிகளே சுவீகரித்துள்ளனர்.
அத்துடன், எம். கீர்த்தனா, பரணிதஸ்ரீ மற்றும் தவிஷனா ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
மருத்துவ துறைக்கான தெரிவு
இந்த முறை பெறுபேறுகளின் அடிப்படையில்கல்லூரியில் இருந்து மருத்துவத் துறைக்கு 6 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 7 மாணவர்களும் தெரிவாகவுள்ளனர்.

இதேவேளை, மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட தோப்பூர் அல்-ஹிதாயா மகா வித்தியாலய மாணவி கே.எல். ஜுனைட் பர்ஹத் ஹயா, கலைப் பிரிவில் திருகோணமலை மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுத் தனது பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் சாதனை படைத்த மாணவிகளுக்கு கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.