சஜித் - ரணில் - மகிந்த அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! ஆளுங்கட்சி எம்பி விமர்சனம்
சஜித் பிரேமதாசவாக இருந்தாலும் சரி ரணில் விக்ரமசிங்கமாக இருந்தாலும் சரி, அல்லது மகிந்த ராஜபக்சவாக இருந்தாலும், அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இன்று(04.06.2026) களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனவாதிகள்
அவர் மேலும் கருத்துரைக்கையில்,
கடந்த காலங்களிலே வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி தாங்கள் இனவாதிகள் இல்லை என்பதை காட்டிக் கொண்டிருந்தவர்கள் விசேடமாக மகிந்த ராஜபக்ச தான் ஒரு இனவாதி இல்லை, தான் ஒரு சிறந்த தலைவன் என கூறிக் கொண்டிருந்தார்.
ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் அவர் ஒரு இனவாதியாக மாறி இருந்தார். அதன் பின்னர் தமிழ் அரசியல் வாதிகளை ஒன்றிணைத்து கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு இனவாதி தான் என வெளிகொணரப்பட்டதன் பின்னர் தமிழ் அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டு சென்று சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டிருந்தார்கள்.

கொழும்பிலே நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில்கூட சஜித் பிரேமதாசா மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, மற்றும் கூட்டு எதிரணியினர் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள்.
அப்போது அவர்களுடைய போலியான முகத்திரைகள் அந்த இடத்திலேயே கிழிக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தக வெளியிட்டிலேயே சஜித் பிரேமதாஸ் கலந்து கொண்டிருக்கவில்லை.
ஏஐ தொழிநுட்பத்தின் ஊடாகத்தான் அந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளிக் கொணரப்பட்டிருந்தன என அவருடைய கட்சியினர் பெய்களைத் தெரிவித்திருந்தார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
ஆகவே சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும் சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும் சரி அல்லது மகிந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள்.
இனவாத செயற்பாடுகள் தான் அவர்களுடைய பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது. நமது அரசாங்கம் ஆட்சி பீடமேறியதன் பின்னர் எந்த ஒரு தேர்தல் மேடைகளிலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனவாதத்தை நாங்கள் கக்கவில்லை.
இனவாதத்திற்கு எதிராக செயல்பட்ட ஒரே ஒரு அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்றது.

எங்களது ஜனாதிபதி அனைத்து நிகழ்வுகளிலும் குறிப்பிடுகின்ற விடயம் இந்த நாட்டிலே இனவாதத்தை மீண்டும் தலை தூக்க விடமாட்டோம்.
இனவாதத்திற்கு எதிராக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்போம். இனவாதத்தை இந்த நாட்டிலே மீண்டும் உருவாக்கி, அதற்கு ஊக்கமளிக்கின்ற அரசாங்கமாக இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராது என்ற விடயத்தை அனைத்து பிரதேசங்களிலும் தெரிவித்து வருகின்றார் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வி.பிறேமானந், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் சி.உதயணன், மற்றும் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், அபிவிருத்திக்கு குழு உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.