பணம் பெற மறுத்த சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா! மனம் திறக்கும் சி.ஐ.டி.யின் முக்கிய அதிகாரி ஷானி அபேசேகர
நான் கைது செய்யப்பட்ட போது எனக்கிருந்த நிதிப் பிரச்சினை அனைத்தையும் தாண்டி, ஒரு சதம் கூட பெற்றுக் கொள்ளாமல் எனக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்க போராடியவரே சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கெளரி சங்கரி தவராசா என சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் (01.10.2022) வெள்ளவத்தையில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 1989ஆம் ஆண்டு நான் சி.ஐ.டி.யில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது கெளரி சங்கரி தவராசாவின் அறிமுகம் கிடைத்தது. அது முதல் நான் அவரை நன்கு அறிவேன். எனினும் ஒரு போதும் அவர் எனது கடமைகளுக்கு அழுத்தம் கொடுத்ததே இல்லை.
கெளரி சங்கரி தவராசா எடுத்த நடவடிக்கை
நான் கைது செய்யப்பட்ட போது, எனது மகளே நிதி விடயங்களை கையாண்டார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ செனவர்தனவின் அறிவித்தல் பிரகாரம் எனது மகள் கெளரி சங்கரி தவராசாவை சந்தித்திருந்தார்.
அதன் பின்னர் எனக்கு பிணை கிடைக்கும் வரையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பிணை மனுக்கள் என அனைத்தையும் ஒரு சதம் கூட பெறாமல் தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா.
எனது பிணை பல காரணங்களால் பல தடைவைகள் நிராகரிக்கப்பட்டன. அப்போதெல்லாம், எனது மகளிடம் ' ஒன்றும் யோசிக்க வேண்டாம்... அடுத்த தவணையில் பிணை கிடைக்கும் ..' என எனது குடும்பத்தாரையும் ஆறுதல் படுத்தியவர் அவர்.
பணம் பெற மறுத்த கெளரி சங்கரி தவராசா
பிணை கிடைத்ததும் நான் அவரை சந்தித்தேன். குறைந்த பட்சம் வழக்கு ஆவணங்களை பிரதி செய்யும் போது ஏற்படும் செலவினையேனும் பெற்றுக் கொள்ளுமாறு கோரினேன். அவர் அதனைக் கூட ஏற்க மறுத்திவிட்டார்.
' உங்களிடம் நான் கட்டணம் பெற்றால், அந்த பாவத்தை நான் எப்படி நிவர்த்திப்பேன் ' எனக் கேட்டவாறே அவர் அதனை நிராகரித்துவிட்டார்.
இன்றைய சூழலில், கெளரி தவராசாவின் மிக அதிகளவில் உணரப்படுகின்றது. கெளரி தவராசாவைப் போன்ற நூற்றுக்கணக்கானக்கானவர்கள் இன்று நாட்டுக்கு தேவைப்படுகின்றார்கள் என கூறியுள்ளார்.




