சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி, 7 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை வடக்குப் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை முன்னெடுப்பு
கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடஉயா மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 22 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய காலி வீதியில் (Old Galle Road) இரவு நேரங்களில் மிக வேகமாக நடத்தப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் காரணமாக கடும் சத்தமும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறும் ஏற்படுவதாக, உள்ளூர் மக்கள் பல முறை முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூபிலி வீதி மற்றும் பழைய காலி வீதியின் அருகிலுள்ள பகுதிகளில் பொலிஸார் சாலை மறியல் அமைத்து இலக்கு வைத்து விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நடவடிக்கையின் போது, 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 7 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், பந்தயங்களில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்கள் வெட்டப்பட்டு மாற்றியமைக்கப்பட்டிருந்ததாகவும், பந்தயத்தின் போது அடையாளம் காணும் வகையில் வாகனங்களுக்கு எண்கள் இடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.