கொழும்பில் வெளிநாட்டு நாணயத்துடன் சிக்கிய தமிழ் யுவதி
கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரங்கள் இரண்டு மற்றும் 500 ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றை திருடிச் சென்று மறைந்திருந்த பெண் குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
பணிப்பெண்
மஸ்கெலியா பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இளம் பெண் வீட்டிற்கு வேலைக்கு வந்து 4 மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 9 ஆம் திகதி விடுமுறையில் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தொழிலதிபரின் 2 பிள்ளைகள் 20 நாட்களில் மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளனர்.
இதன் போது தந்தை தனது பிள்ளைகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த 2 மதிப்புமிக்க கைக்கடிகாரங்களை தேடியபோது, அவை காணாமல் போனதைக் கண்டு, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
4 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த இளம் பெண் விடுப்பில் சென்றுவிட்டு வேலைக்குத் திரும்பவில்லை எனவும் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபர் காணாமல் போன கைக்கடிகாரம் மற்றும் பணத்தை திருடிவிட்டதாக தெரியவந்தது.
இந்த நிலையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
