மஹர சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன...! பதற்றத்தின் பின்னணி குறித்து வெளியான தகவல்
மஹர சிறைச்சாலைக்குள் இருந்த தடைசெய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் தங்கள் பொறுப்பிற்குக் கீழ் கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையே அண்மைய பதற்றத்திற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளன.
அதிகாரிகளின் நடவடிக்கையின் காரணமாக, கைதிகள் சில நாட்களாகவே ஒருங்கிணைந்து பதற்றத்தை உருவாக்க தயாராகியிருந்ததாக தெரியவந்துள்ளது.
மஹர சிறைச்சாலையின் புதிய பிரதான அதிகாரியாக கயான் திலகரத்ன கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன
அவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரரின் சகோதரராகும்.

குறித்த பிரதான அதிகாரி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பல ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர், நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அவர் மஹர சிறைச்சாலையின் பிரதான ஜெயிலராகக் கடமைகளை ஆரம்பித்திருந்தார்.
குறித்த பிரதான அதிகாரி சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும் அதிகாரியொருவர் எனச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அவர் மஹர சிறைச்சாலையில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதைத் தவிர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள்
சிறை அறைகளுக்குள் இருந்த போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைத் தங்கள் பொறுப்பிற்குக் கீழ் எடுப்பதற்காக அவரது தலைமையில் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சிறைச்சாலையில் இருந்த போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
சில கைதிகள் போதைப்பொருள் கிடைக்காமையின் காரணமாக கடந்த வாரத்தில் சிறைச்சாலைக்குள் அசெளகரியத்திற்குள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சில கைதிகள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பின்னணியில், கைதிகள் சிலர் கடந்த சனிக்கிழமையன்று குறித்த அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர்.
சிறைக்குள் அரங்கேறிய வன்முறை சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பல கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.