தீவு வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,500 கிலோகிராம் கடல் அட்டைகள் பறிமுதல்
மனோலி தீவு வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,500 கிலோகிராம் கடல் அட்டைகள் நேற்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த கடலட்டைகள் இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களால் நாட்டுப்படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரப் படை வீரர்கள், வன ஊழியர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஹோவர் கிராப்ட் மூலம் நேற்று கூட்டு ரோந்து சென்றுள்ளனர்.
அப்போது மனோலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நாட்டுப்படகினை கைப்பற்றியுள்ளனர்.
எனினும், ஹோவர் கிராப்ட் விரைந்து வருவதை அறிந்த நாட்டுப்படகில் இருந்த 4 பேர் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது பதிவெண் இல்லாத குறித்த நாட்டுப்படகில் பதப்படுத்தப்படாத பச்சை கடல் அட்டைகள் 1500 கிலோகிராம் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனப் பாதுகாப்பு படை, வன காவல் படை இணைந்து தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடமிருந்த 35 கிலோகிராம் கடல் அட்டை மற்றும் 200 கிராம் கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த முகமது யாசர் அலி என்பவரை கைது செய்து கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.