மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் மீண்டும் பலத்த பாதுகாப்பு
மட்டக்களப்பு (Batticaloa) நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் தொடர்பான சம்பவத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நேற்றைய தினம் (28) மீண்டும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை முன்னெடுத்த பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நீதின்ற கட்டிடத் தொகுதியை 25ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் உட்பட்ட நாட்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கடந்த வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த பதிவு தபால் ஒன்றையடுத்து பொலிஸார் உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
அச்சுறுத்தல் கடிதம்
இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் நீதிமன்ற கட்டிட தொகுதி பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி தொடக்கம் விசேட அதிரடிப்படையினர் 8 மணிவரை குண்டை தேடி மோப்பநாய் சகிதம் தேடுதல் நடாத்திய பின்னர் நீதிமன்றத்துக்குள் செல்வோரை பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று (28) விசேட அதிரடிப்படையினர் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற உத்தியோகத்தர்களின் வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் உள் நுழைய தடைவிதித்துள்ளனர்.
அத்துடன், அனைவரையும் பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுதிக்கப்பட்டதுடன் கட்டிட தொகுதியை சுற்றி பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுன் புலனாய்வு பிரிவினரும் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வந்த கடிதம் தொடர்பாக பொலிஸார் புலனாய்வு பிரிவினர் தனித் தனியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |