கல்முனையில் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள கடற்தொழிலாளர்கள்: குடும்பத்தினர் பாதிப்பு (Video)
கடலுக்கு சென்ற நிலையில் கடந்த 10 தினங்களாக கரைக்கு திரும்பாத கடற்தொழிலாளர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26ஆம் திகதி புறப்பட்டு சென்ற 4 கடற்தொழிலாளர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
காணாமல் போன கடற்தொழிலாளர்கள்
கடற்தொழிலாளர்கள் காணாமல் சென்ற விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினர் கொண்டு வந்திருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகின் உரிமையாளரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க தற்காலிகமாக ஏதாவது கொடுப்பனவையோ அல்லது நஷ்டஈட்டையோ பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் இதுவரை முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்க கோரிக்கை
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இந்நிலையில் மனிதாபிமான நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டு குறித்த கடற்தொழிலாளர்களின் குடும்பங்களிற்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு கடற்தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதுடன், கடற்தொழிலாளர்கள் சங்கங்களும் தனியான தேடுதல் வேட்டையை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.