இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதனை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து
புதிய இணைப்பு....
இலங்கை காவல்துறையினரின் விசேடபடையணிக்கு (Special Task Force (STF)), ஸ்கொட்லாந்து காவல்துறை, 2007 முதல் பயிற்சியளித்து வருகின்றார்கள்.
அவர்களால் பயிற்றப்பட்ட படையணியே இறுதிப்போரின் போது, பிரித்தானிய தனியார் இராணுவமான கீனி மீனியின் ஒத்துழைப்புடன் மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்திருந்தார்கள் எனப் பிரித்தானிய ஊடகவியலாளர் ஃபில் மில்லர் Keenie Meenie: Britain’s Private Army என்ற விவரணப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
சித்திரவதையில் இருந்து விடுதலை (Freedom From Torture) மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) போன்ற மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து ஸ்கொட்லாந்து அரசுக்கு அழுந்தம் வழங்கி வந்தன.
இதனைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து காவல்துறை பயிற்சியளிப்பதை மீளாய்வு செய்ய வேண்டுமெனப் பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை அமைப்புக்கள் பலவும் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன.
இதன் விளைவாகவே இன்றைய ஸ்கொட்லாந்து காவல்துறையினரின் உயர்மட்ட கலந்துரையாடலில் 2009ம் ஆண்டு இறுதிப்போரில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை மேற்கோள் காட்டி இலங்கை காவல்துறைக்கான பயிற்சியை நிறுத்துவது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியோக பூர்வ அறிவிப்பு தொழில் கட்சிக்கு ஆதரவான தமிழர் அமைப்பின் (Tamils For Labour) தலைவரான சென் கந்தையா அவர்களுக்கு ஸ்கொட்லாந்து பொலிஸாரின் உயர் மட்ட அதிகாரியால் மின்னஞ்சல் மூலம் உத்தியோ பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான இந்த அறிவிப்பு தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களாலும் (Tamils For Labour), பழமைவாத கட்சிக்கான பிரித்தானிய தமிழர்களாலும் (British Tamil Conservative) மற்றும் பிரித்தானிய வாழ் தமிழ் இளையோராலும் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிக்கான வெற்றியாகவே இவ் அறிவிப்பு அமைந்துள்ளது.
இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தால் சித்திரவதைப்பட்ட தமிழர்கள் துணிந்து முன்வந்து ஸ்கொட்லண்ட் ரைம்ஸ் போன்ற பத்திரிகைகளுக்கு நேர்காணல்களை வழங்கியிருந்தமையும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலதிக தகவர்களுக்கு:
இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதனை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து
ஸ்கொட்லாந்து, இலங்கை பொலிஸாருக்கு வழங்கி வரும் பயிற்சிகளை இடைநிறுத்திக்கொள்வதாக இன்று அறிவித்துள்ளது.
ஸ்கொட்லாந்து பொலிஸார் இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பயிற்சி குறித்து இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை காலாவதியாகின்றது என தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் கால எல்லையை மீள நீடிக்கும் உத்தேசம் கிடையாது என தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதனை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு தரப்பினர் ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு அழுத்தங்களை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு இது விடயமாக எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.
உலக அளவில் பொலிஸ் சேவையை அபிவிருத்தி செய்வதற்கு தொடர்ச்சியாக உலகம் முழுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவிகளை வழங்கும் என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் இலங்கையுடனான பொலிஸ் பயிற்சி குறித்து செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை நீடிக்கப் போவதில்லை என இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
நாடுகளின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையிலேயே பயிற்சி ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் இந்த மதிப்பீடு பூரணப்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பொலிஸ் பயிற்சி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும் தற்பொழுது நாட்டின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் மாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.