அமெரிக்கா - ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முயலும் பாகிஸ்தானுக்கு சவூதி தாக்குதலால் பின்னடைவு!
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை ஏற்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில்சாலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் இந்த அமைதி முயற்சியைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சவூதி அரேபியா இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தால், பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்றும், சவூதியுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானும் இந்தப் போருக்குள் இழுக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
ஈரான் தற்போது "மெல்லிய பனிக்கட்டி மீது நடப்பதைப் போன்ற" ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அடுத்த சில மணிநேரங்கள் பேச்சுவார்த்தையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பிலிருந்தும் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் முக்கிய மத்தியஸ்தராகப் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரச் சம்மதித்தாலும், சில கடுமையான நிபந்தனைகளை முன்வைப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. எந்தவித முன்நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானை இஸ்லாமாபாத் வலியுறுத்தி வருகிறது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி கண்டனம்
சவூதி அரேபியா மீதான தாக்குதல் ஒரு "ஆபத்தான நகர்வு" என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போரில் நேரடியாக ஈடுபடுவதைப் பாகிஸ்தான் தவிர்க்க விரும்புகிறது; ஏனெனில் ஈரானுடனான எல்லைப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள கணிசமான ஷியா முஸ்லிம் மக்களிடையே ஏற்படக்கூடிய அதிருப்தி ஆகியவை உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாகிஸ்தான் அஞ்சுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதில் ஈரான் காட்டும் தீவிரம், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் துணை நிற்கும் பாகிஸ்தானையே இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 28 நிமிடங்கள் முன்
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam