அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கின்றோம்: சத்தியலிங்கம் எம்.பி
நாட்டின் பொருளாதாரத்தை ஆறு மாதங்களுக்குள் மாற்றுங்கள் என்று அரசாங்கத்தை கூறுவது இயலாத விடயம். அதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்கு நாங்களும் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா மாகறம்பைக்குளம் பிரதான வீதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆட்சிமாற்றம்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த செயற்திட்டம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது இந்த ஆட்சிமாற்றம் ஏற்பட்டமைக்கு முக்கிய காரணம் நாட்டின் பொருளாதார பிரச்சனையே.
கடந்தகால ஆட்சியாளர்கள் விட்ட தவறே ஜேவிபி என்ற என்பிபி ஆட்சியமைப்பதற்கு காரணமாக இருந்தது. இலங்கை மக்கள் என்ற வகையில் பார்த்தால் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி, மக்களுடைய சொத்தை கொள்ளை அடிக்காத அரசாங்கமும், ஆட்சியாளர்களும் இருக்க வேண்டியது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை.
ஆனால் தமிழ் மக்களை பொறுத்த வரை இதைவிட மேலதிகமாக இனப்பிரச்சனை என்ற ஒன்று இருக்கிறது. இந்த அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்தை காண்பதற்குரிய முதற்படிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்கள்
அதற்கு நாங்கள் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஆதரவு அளிக்கலாம். ஆனால் எமது அரசியல் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ் மக்களாகிய நாங்கள் விடிவு நோக்கிய பயணத்தில் மாற்றமில்லாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

தற்போதைய அரசுக்கு பயங்கவரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை நீக்காமல் இப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல அண்மையில் வவுனியாவில் மக்களின் சொந்த காணிகளுக்குள் வனவளத்திணைக்களம் எல்லை போடுகின்றமை தொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
நான் அங்கு சென்றமையால் அதனை தடுக்கமுடிந்தது. ஏன் அரசாங்கத்தால் இதனை செய்யமுடியாது.
இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தமது சொந்த காணிகளுக்குள் செல்வதை இந்த திணைக்களம் எதற்காக தடுக்கிறது. வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ளமக்கள் இது தங்களுக்குரிய காணி என்று தெரிவித்த போது அங்கு நின்ற வனவளத்திணைக்கள அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து காட்டியுள்ளார்.

நான் அவர்களை எச்சரித்திருந்தேன். இதன் மூலம் அடக்கு முறை அரசியலை செய்வதற்கு அரசாங்கம் மாறினாலும் அரச நிர்வாகம் மாறவில்லை என்பது புலப்படுகிறது. அதனை மாற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தை ஆறு மாதங்களுக்குள் மாற்றுங்கள் என்று கூறுவது இயலாத விடயம். அதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்கு நாங்களும் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம். அது பொதுவான பிரச்சனை.
ஆனால் இந்த மக்களின் காணி விடயங்களில் நிதி செலவளிக்காமல் உடனடியாக தீர்வினை வழங்கமுடியும். அதனை செய்ய ஏன் தயங்குகின்றனர். இந்த நிர்வாகங்களை கையாள முடியாத கையாலாகாத அரசாங்கமாகவே இது இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        