நாடு திரும்பினார் சரஸ்வதி புஷ்பராஜ்
சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்த நிலையில், அங்கு கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளானார் எனக் கூறப்படும் மலையகப் பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ் நாடு திரும்பியுள்ளார்.
குறித்த பெண் இன்று(01.09.2023) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அவரின் உறவினர்கள் பொறுப்பேற்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்த சரஸ்வதி தொடர்பான செய்தியை ஊடகங்கள் நேற்று வெளியிட்டிருந்தன.
வெளியான காணொளி
சரஸ்வதி, இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வறுமை காரணமாக கடந்த ஜுலை 15 ஆம் திகதி சவுதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றிருந்தார்.
அவர் வேலை செய்யும் வீட்டில், வீட்டு உரிமையாளர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டிருந்ததாகவும், உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை எனவும் தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியிருந்தார்.
இதனால் அவரின் தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தன்னை காப்பாற்றுமாறு சரஸ்வதி இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பான காணொளி வெளியான பின்னர், அவரை வேலைக்கு அனுப்பிய முகவர்கள், சவுதியில் உள்ள தமது நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
மேலும், பிறிதொரு வீட்டில் வேலை பெற்றுத் தருவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். எனினும், தான் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சரஸ்வதி தெரிவித்திருந்த நிலையில் சரஸ்வதி இன்று நாடு திரும்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



