ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்ப களமிறங்கியுள்ள பௌத்த தேரர்கள்: சம்பந்தன்
ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் கைகோர்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனி ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ள நிலையில் என்ன நடக்கப் போகின்றது என்பதை தம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்று முன் தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது என்று கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபமடைந்து வருகின்றன.
வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றனர். இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.
அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசுக்கு இன்று தலைகுனியும் நிலை
ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.