"13" குறித்த ரணிலின் உரைக்கு உரிய நேரத்தில் பதில்! சம்பந்தன் திட்டவட்டம்
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரைக்கு உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்." என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டுப் பதிலளிக்க விரும்பவில்லை.
'13ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு இந்த நாட்டின் அதியுயர் சட்டமாகும். அதை நாம் புறக்கணிக்க முடியாது.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நிறைவேற்று அதிகாரமும், நாடாளுமன்றமும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்' என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09.08.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.
இந்திய பிரதமருக்கு தெளிவான கடிதம்
13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்து விசேட உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் இன்று (09.08.2023) இரவு வினவியபோது,
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் எமது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அவர் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் எழுதிய கடிதத்திலும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.
ஜனாதிபதியின் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




