ரணிலுக்கு நெருக்கமானவரை சிறைச்சாலையில் சந்தித்த சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவின் நலம் குறித்து விசாரிக்க மகசின் சிறைச்சாலைக்கு நேற்று சென்றுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு ‘ வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை என்றாலும், சமன் ஏகநாயக்க ஒரு "நல்ல மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி" என்பதால் அவரைப் பார்க்க வந்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் மோசமான நடத்தை
''நான் வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை. இன்று நான் ஏன் வந்தேன் என்ற கேள்விக்கு ஒரு சுருக்கமான பதிலை கூறுகின்றேன். என் கணவர் விஜய குமாரதுங்க சிறையில் இருந்தபோது, விஜயவுக்கு உணவு கொண்டு வந்தேன். மற்ற கைதிகளைப் போல இரவில் உணவு எடுத்துச் செல்ல கூட அவருக்கு அனுமதி இல்லை. அது வேறு கதை எனவும் நினைவு கூர்ந்துள்ளார்.

ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு நேர்மையான, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த பொது சேவை அவசியம்.குறிப்பாக ஒரு அரசாங்கத்தின் அமைச்சரவை நிர்வாக சேவையை அடிப்படையாகக் கொண்டது, இது நாட்டின் சிறந்த அம்சமாகும்.
இருப்பினும், தங்கள் கட்சியை ஆதரிக்காத அதிகாரிகளைத் தாக்கும் அரசியல் கலாச்சாரம் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் காலத்திலிருந்தே தொடங்கியுள்ளதாகவும், அது நிகழ்காலத்திலும் நடப்பதாக தெரிகின்றது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
திறமையான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
சமன் ஏகநாயக்க மிகவும் திறமையான ஆட்சியாளர் என்றும், மிகவும் நல்ல மனிதர் என்றும், முந்தைய பல அரசாங்கங்களில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றியதால் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து விசாரிக்க வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இத்தகைய திறமையான அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் பொது சேவையையும் நாட்டின் எதிர்காலத்தையும் மோசமாக பாதிக்கும் என்றும் சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.