ஐசிசி ஒழுக்க விதியை மீறிய சல்மான் அலி ஆகா- கடுமையாக சாடிய நடுவர்கள்
டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா ஐசிசி நடத்தை விதிகளின் 1ஆம் நிலையை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39-வது ஓவரில் சல்மான் அலி ஆகா ரன்-அவுட் ஆனார்.
விளையாட்டின் விதிமீறல்
அந்த ஏமாற்றத்தில், அவர் தனது துடுப்பாட்ட கையுறைகள் (Gloves) மற்றும் தலைக்கவசத்தை (Helmet) மைதானத்தில் தூக்கி எறிந்தார். இது விளையாட்டு உபகரணங்களை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டது.

ஐசிசி விதித் தொகுப்பின் 2.2 பிரிவை (சர்வதேச போட்டியின் போது விளையாட்டு உபகரணங்கள் அல்லது மைதான உடைமைகளை தவறாகப் பயன்படுத்துதல்) அவர் மீறியுள்ளார். அவருக்கு அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது ஒழுக்கப் பதிவேட்டில் ஒரு தகுதியிழப்பு புள்ளி (1 Demerit Point) சேர்க்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் தவறு இதுவாகும். சல்மான் அலி ஆகா தனது தவறை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், கள நடுவர்களான ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், தன்வீர் அகமது மற்றும் மூன்றாவது நடுவர் குமார் தர்மசேன உள்ளிட்டோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் (DLS முறைப்படி) வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இத்தகைய விதி மீறல்களுக்கு அதிகபட்சமாக வீரரின் போட்டி ஊதியத்தில் 50% அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படலாம்.