அரசமைப்புப் பாதுகாப்பு குறித்து சஜித் வழங்கியுள்ள அறிவுரை
அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப் பார்வையுடனான தேசிய உரையாடல் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரூவுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசமைப்பு நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடனும் சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய வகையில் நிறுவனக் கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்பு சீர்திருத்தங்கள் தற்போதைய அரசியல் தேவைகளுக்காக அல்லாமல், அதிகாரம் மாறும் சந்தர்ப்பத்தில் கூட மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சி முறை பாதுகாப்பு
சுயாதீன அரசமைப்புச் சார் நிறுவனங்களைப் பாதிக்கும் சீர்திருத்தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு விதிகள், வெளிப்படைத்தன்மை மற்றும் அர்த்தமுள்ள பொதுமக்கள் கலந்தாலோசனைகள் அவசியம் என்பதுடன், நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளின் சிறப்புரிமை அல்ல, மாறாக மக்களின் மற்றும் அரசமைப்பு ஆட்சி முறையின் பாதுகாப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கும் போது பொதுநலவாயக் கோட்பாடுகளை முக்கியமான சர்வதேச அளவுகோலாகப் பயன்படுத்தலாம் என அவதானிக்கப்பட்டதுடன், தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்வாக்கு செலுத்தாமல் நீண்டகால அரசமைப்பு சீர்திருத்தமாக விசேட அரசமைப்பு மீளாய்வுப் பொறிமுறை தேவையா என்பதைப் பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட சிறப்புவாய்ந்த சுற்றாடல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சுற்றாடல் நீதியை வலுப்படுத்துவதற்கும் பொதுநலவாய நாடுகளின் அனுபவங்களை ஆராய்ந்து பொருத்தமான மாதிரியைத் தேர்ந்தெடுக்க விருப்பமும் தெரிவிக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening