தேர்தல் நடந்தால் எமக்கே வெற்றி! தோல்விக்கு அஞ்சியே தேர்தலை இழுத்தடிக்கின்றது இந்த அரசு - சஜித்
மாகாண சபைத் தேர்தல் நடந்தால் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் அமோக வெற்றியீட்டும் என்றும், தேர்தல் தோல்விக்கு அஞ்சியே இந்த அரசு தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மகா விகாரைக்கு நேற்று(21.06.2026) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்குள்ள முக்கிய தேரர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேரர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்
மல்வத்து மகா விகாரைக்கு நேற்றுக் காலை விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், மல்வத்து மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து, அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்று, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இதன்போது மகாநாயக்க தேரர்களுக்கு அட்டப்பிரிகரவகை அன்பளிப்பு செய்ததுடன், சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பரந்த தேசிய கலந்துரையாடல் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தை முடக்கும் தனிக்கட்சி
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சகல ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்துக்குள்ளும், அதற்கு வெளியேயும் முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.
மக்கள் பெற்றுக் கொடுத்த அறுதிப் பொரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு இன்று அதிகார மமதையுடன் நாடாளுமன்றக் குழுக்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கையாண்டு வருகின்றது.

ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக ஆட்சியைப் பிடித்துவிட்டு, இன்று ஜனநாயகத்தை முடக்கும் தன்னிச்சையான தனிக்கட்சி ஆட்சியை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது.
இனிவரும் தேர்தல்களில் எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தேவையில்லை, எளிய பெரும்பான்மை இருந்தால் போதுமானது என்பதை நாட்டின் 220 இலட்சம் மக்களும் இப்போதாவது பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நிவாரணங்களை வழங்க மறுக்கும் அரசு
சர்வதேச சந்தையில் விலைகள் குறைந்து காணப்படும் இந்தத் தருணத்தில், பாகிஸ்தான் போன்ற நாடுகள் விலையைக் குறைத்துள்ள போதும் இலங்கை அரசு ஏன் குறைக்கவில்லை? வெறும் வெற்றுப் பேச்சுக்களாலும் பொய்களாலும் இந்த அரசாட்சி நடக்கிறது.
30 - 40 வீதம் வரையான மக்கள் ஏழைகளாக மாறியுள்ளனர். இந்த வறுமையிலிருந்து மக்களை மீட்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரதான தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ நாட்டைப் பொறுப்பேற்கும்போது வடக்கிலும் தெற்கிலும் பயங்கரவாதம் நிலவியதுடன், வளைகுடாப் போரும் நடந்துகொண்டிருந்தது.
நாலாபுறமும் நெருப்பு எரிந்துகொண்டிருந்த போதும், நாட்டு மக்களுக்கு அவர் நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொடுத்தார்.
ஆனால் இன்றுள்ள அரசு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க மறுக்கிறது.
ஒருங்கிணைந்து ஆட்சி நடத்தவதற்காக அழைப்பு
மாகாண சபைத் தேர்தலை நடத்தயிருந்தால் இந்த அரசின் உண்மையான ஆயுட்காலம் எவ்வளவு என்பதை மக்கள் காட்டியிருப்பார்கள்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கொள்கை ரீதியாக நாம் இணையத் தயாராக உள்ளோம்.

இரு கட்சிகளினதும் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு இந்தப் பயணம் தொடரும்.
தீவிர போக்கு கொண்ட அரசியலிலிருந்து விடுபட்டு, நடுத்தர பாதையைப் பின்பற்றும் ஐக்கிய மக்கள் சக்தியோடு வந்து இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்துத் தரப்புகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
இங்கு பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும் சூதாட்டங்கள் எதுவும் நடக்காது. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam