1700 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நிவாரண உதவி: இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவிப்பு
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் சுமாராக 1700 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளோம் என்று இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.
இதுபோன்று இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள், இலங்கை மக்களுடன் என்றுமே துணை நிற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என். எம். ஆலம் தலைமையில் இன்று(19) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்களுக்கு நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக நிவாரண பொருட்களை கையளித்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் மன்னார் மாவட்டத்திற்கும் பங்கிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட புயல் காரணமாக நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி முதல் இந்திய மக்களினதும், அரசாங்கத்தினதும் உதவி ஊடாக இதுவரையில் சுமார் 1700 மெட்ரிக்தொன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும், வடக்கு மாகாணத்திற்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம். இந்த நிவாரண உதவிகள் மாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தில் அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கு மீன்பிடி வலைகள், படகுகள், வெளி இணைப்பு இயந்திரங்கள் போன்றவற்றை வெகு விரைவில் வழங்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.






