நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை! பிரதமர் ஹரிணி அளித்த உறுதி
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்தபடி, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
இன்றையதினம் (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆய்வுப் பணிகள்
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையானது, முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாகவே ஒழிக்கப்படும்.
புதிய அரசியலமைப்பின்றி இதனைச் செய்ய முடியாது என்பதால், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
வழங்கிய வாக்குறுதி
இதற்காக இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட குழு அறிக்கைகள் மற்றும் ஏனைய முன்மொழிவுகள் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான வரைவு பற்றிய 'கருத்துரு ஆவணம்' விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், முறையான அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.