கிளிநொச்சி பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்! மனித உரிமைகள் அதிகாரி கிளப்பும் சர்ச்சை...
கிளிநொச்சி - பளை பகுதியில் புதிதாக மூன்று மாடி கொங்கிரீட் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு 100 முதல் 150 பேர் வரை வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் முகமாக மாற்றப் போகிறார்களா? அல்லது இங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப் போகிறார்களா?என அங்கிருக்கும் சிங்கள அதிகாரிகள் தங்களிடம் தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜெயசேகர, இன்று நடத்திய ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறன்று பாதுகாப்பை பலப்படுத்தாத இரு கட்டளை அதிகாரிகள்! குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை...
49 ஏக்கர் அரசாங்கக் காடுகள் அழிப்பு
பளை பகுதியில் சுமார் 49 ஏக்கர் அரசாங்கக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வன அலுவலக அதிகாரி ஏழு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதி , பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன , பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோருக்கு தனிப்பட்ட கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளோம். அதற்கான ஆதாரங்கள் புகைப்படங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் சிங்களவர்கள் இல்லை, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சிங்களவர்களும் அதிகாரிகளுமே நம்மிடம் இதைக் கூறுகிறார்கள்.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் அல்லது மத்திய அரசின் எவ்வித அனுமதியும் இன்றி இவ்வளவு பெரிய கட்டிடங்களை எவ்வாறு கட்ட முடிந்தது?
இதன் பின்னணியில் இருப்பது யார்? அங்குள்ளவர்கள் கூறும் தகவல்களின்படி, அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் ஒரு வெளிநாட்டுத் திட்டமாக இதற்கு உதவி செய்வதாக கூறப்படுகிறது.
ஏழு வழக்குகள் தாக்கல்
தற்போது 7 வழக்குகளைத் தாக்கல் செய்த வன அலுவலக அதிகாரியை (RFO) கொலை செய்வதற்கு சம்பந்தப்பட்ட தமிழர்கள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் தற்போது அந்த அதிகாரி பயத்தில் வழக்கு நடைபெறும் திகதிகளில் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு, ஏனைய நாட்களில் விடுமுறை எடுத்து ஒளிந்து வாழ்கிறார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடம் நாம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளோம். இந்த RFO மற்றும் அதே வன அலுவலகத்தில் பணிபுரியும் அவரது மனைவி ஆகிய இருவரையும் குருநாகலுக்கு இடமாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டோம்.

முதற்கட்டமாக அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
மேலும் பொலிஸ் நிலையததில் உள்ள எந்தவொரு அதிகாரியும் இது குறித்து கண்டுக்கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையின் ஏனைய அதிகாரிகளும் கூட இந்தப் பிரச்சினைக்குப் பயப்படுகிறார்கள். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.