பிரித்தானியாவுக்குள் ஊடுறுவிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானிய கடல் பிராந்தியத்திற்குள் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களின் அத்துமீறிய செயல்பாட்டை கண்டுபிடித்து இருப்பதாக பிரித்தானிய அரசு வெளிப்படுத்தியுள்ளது.
வட அட்லாண்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவின் மூன்று ரகசிய நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாட்டை ஒரு மாத காலமாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.
பிரித்தானிய ரோயல் கடற்படை மற்றும் P8 போஸிடான் விமானப்படை விமானங்கள் இணைந்து ரஷ்யாவின் அகுலா ரக(akula class) அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் மற்றும் ரஷ்யாவின் ரகசிய பிரிவான GUGIயின் இரண்டு உளவு நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டறிந்தனர்.
கண்காணிப்பு நடவடிக்கைகள்
ரஷ்யாவின் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் பிரித்தானியாவின் பொருளாதார மண்டலத்திற்குள் இருந்தது. ஆனால் இவை பிரித்தானியாவின் எல்லைக்கு உட்பட்ட கடற்பகுதிக்குள் நுழையவில்லை.

இந்த 3 நீர்மூழ்கி கப்பல்களும் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டவுனிங் தெருவில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, கடலுக்கு அடியில் அமைந்துள்ள எரிவாயு குழாய்கள் மற்றும் தொலைதொடர்பு கேபிள்களை குறிவைத்து இந்த நீர்மூழ்கி கப்பல்கள் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தொடர் கண்காணிப்புகள் காரணமாக இந்த உள்கட்டமைப்புகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஹீலி, பல்வேறு உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் பிரித்தானியா விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள பதற்றங்களை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளின் கவனத்தை நீங்கள் திசைத் திருப்ப முயற்சித்தாலும் பிரித்தானியாவின் முக்கிய எதிரி ரஷ்யா தான் என்பதில் தெளிவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.