ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் கூரை விழும் அபாயம்
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் கூரை விழும் அபாயத்தில் காணப்படுவதாக மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட அனுராதபுர எல்லைக் கிராமமான இக்கிராமத்தில் மீன்பிடி, சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் பெற்றோர்களின் பிள்ளைகள் இப்பாடசாலையில் அதிகளவில் கல்வி பயின்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதலாம் ஆண்டு தொடக்கம் பதினோராம் ஆண்டு வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற போதிலும் போதியளவு இடவசதி இல்லை எனவும் இடவசதி இல்லாமையினால் பெற்றோர்களின் உதவியுடன் குடிசை ஒன்றினை அமைத்து அதில் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் மாணவர்களின் கற்றலுக்கான இடவசதி, ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதி எதுவும் இல்லை எனவும் இது விடயமாகக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருக்கும், திருகோணமலை வடக்கு கல்வி வலய பணிப்பாளருக்குப் பல தடவைகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினால் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பழமைவாய்ந்த கட்டிடத்தில் இரண்டு வகுப்புகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், அக்கட்டிடத்தின் கூரை எந்த நேரத்தில் விழும் என்ற அச்சம் நிலவி வருவதாகவும் பெற்றோர்களும் மாணவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
இருந்த போதிலும் பாடசாலைகள் குறைகள் குறித்துப் பெற்றோர்கள் தங்களுடைய எதிர்ப்பினை வெளிக்காட்ட முற்பட்ட போதிலும் அப்பாடசாலையின் நிர்வாகத்தினால் இடைநிறுத்தப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாகத் திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயம் அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலையாகும். ஆனாலும் 17 ஆசிரியர்கள் தேவைப் படுகின்ற போதிலும் 12 ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த ஐந்து வருடங்களாக இப்பாடசாலையில் சித்திர பாடத்திற்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் இப்பாடசாலையின் பற்றாக்குறையை மிக விரைவில் நிவர்த்தி செய்து தரவேண்டும் எனப் பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.டி.எம்.நிஷாம் குறித்த பாடசாலைக்கு வருகை தந்து அப்பாடசாலையில் காணப்படுகின்ற அனைத்து குறைபாடுகளையும் உடனடியாக நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட செய்தியும் பின்னர் அப்பாடசாலையில்
குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காகச் செய்தி வெளியிட்டு
தமிழ்வின் இணைய தளத்திற்கும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், மாகாண
பணிப்பாளருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகப் பிரதேச மக்கள்
குறிப்பிட்டுள்ளனர்.