கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தாலும் ஆபத்துக்கள் ஏற்படலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோவிட் பெருந்தொற்றிலிருந்து குணமடைந்தாலும் நோய் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் ஆஷா சமரநாயக்க (Asha Samaranayake) தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தாலும் அதன் பின்னர் கோவிட் நியூமோனியா போன்ற ஆபத்தான நிலைமைகள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் ,நியூமோனியா, நுரையீரலில் பக்றீரியா தாக்கம், மூளை திசுக்களில் நோய்த்தொற்று, நாளங்களில் பாதிப்பு, இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்றுக்கு உள்ளாகுவோர் பரிந்துரை செய்யப்படும் மருந்துகளை உரிய முறையில் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு லீற்றர் தண்ணீர் அருந்த வேண்டுமெனவும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததன் பின்னர் ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.