சிறுமி மரண விவகாரம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடவுள்ள ரிஷாட் பதியுதீன்
பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமானமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 9 வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ரிஷாட் பதியுதீனை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரிஷாத் பதியுதீனுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருக்கும் போது அதே வயதையொத்த ஒரு சிறுமியை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் அவர் ஏன் சிந்திக்கவில்லை என்றும் பிரதி மன்றாடியார் நாயகம் கேள்வியெழுப்பியுள்ளார்.
சிறுமி மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வர் மீதும் வன்கொடுமை, சிறுமியை பணிக்கு அமர்த்தியமை, கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்தடவையாக கடந்த 24ம் திகதி புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதவான் அன்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இவ்வாறு 48 மணிநேர விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றுக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய 8 பக்க அறிக்கையை காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.