இன,மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது: அமைச்சர் டக்ளஸ்
இன,மத ரீதியில் யாரையும் புண்படுத்தும் வகையில் எந்தவிதமான தீர்மானங்களும் அமையக்கூடாது என்றும், பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டில் ஒவ்வொருவரும் ஏனையவர்களின் உணர்வுகளைப் பாதிக்காத வகையில் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இந்து ஆலயத்திற்கு முன்பாக கருவாடு காய வைக்கும் வாடி அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - கடலூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக மீன் கருவாடுகளைக் காய வைக்கும் வாடி அமைப்பதற்குச் சம்மந்தப்பட்ட பிரதேச அமைப்புக்களினால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட குறித்த ஆலய நிர்வாகத்தினர், முருகன் ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கருவாட்டு வாடி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, ஆலயச் சூழலின் புனிதத்தன்மையைப் பாதிப்பதாகவும், குறித்த வாடி அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே ஆலயத்தின் தீர்த்தோற்சவம் நடத்தப்படுவது மரபாக இருக்கின்ற நிலையில், பிரதேசத்தில் வாழுகின்ற இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளது எனவும் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலயப் பிரதேசத்தில் கருவாட்டு வாடி அமைப்பதனால் இந்து மக்களுக்கு ஏற்படக்கூடிய உணர்வு ரீதியான பாதிப்புக்களை எடுத்துரைத்தார்.
அத்துடன் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லுறவிற்கும் இந்தத் தீர்மானம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனால், குறித்த கருவாட்டு வாடியை பொருத்தமான இன்னுமொரு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri