யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றம்
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை
தையிட்டி தெற்கில் மக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், பிரதேசசபையின் சட்ட விதிமுறைகளிற்கேற்ப இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பதவி உயர்விற்கான எதிர்ப்பு
அத்தோடு சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பதவி உயர்வுக்காக எதிர்ப்பை சபையில் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |