அக்குரேகொட இரட்டைக்கொலை! சந்தேகநபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் இரகசிய தகவல்
அக்குரேகொடவில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மேலும் பல உண்மைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கித்தாரியான முன்னாள் இராணுவ வீரரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இரட்டைக் கொலை தொடர்பான பல உண்மைகள் தற்போது வெளியாகி வருகின்றன.
வாக்குமூலத்தில் வெளியான தகவல்
குறித்த கொலைக்கு முன், கரந்தெனிய சுத்தா, பத்தேகமவைச் சேர்ந்த 46 வயதான இந்த முன்னாள் இராணுவ வீரருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.

" ஒரு வழக்கறிஞரைச்சுட வேண்டும். எனது கடவச்சீட்டு விவரங்கள் வழக்கறிஞரிடம் உள்ளன. மேலும், கரந்தெனிய சுத்தாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான தகவல்கள் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
மேலும், கரந்தெனிய சுத்தாவை இராணுவத்தில் இருந்தபோது அடையாளம் கண்டுகொண்டதாகவும், இதன்பின்னர் இராணுவத்தை விட்டு வெளியேறி திருட்டில் ஈடுபட்டதாகவும், திருட்டு தொடர்பாக காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
கொலை வழக்கு
அதே நேரத்தில், ஒரு மருத்துவரைக் கொன்ற வழக்கில் கரந்தெனியே சுத்தா காவலில் வைக்கப்பட்ட போது இருவரும் நண்பர்களானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரந்தெனிய சுத்தா பிணை பெற தேவையான பணத்தை வழங்கிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனது மகள் வயதுக்கு வந்த பிறகு, கரந்தெனியே சுத்தாவிடம் ரூ.1.5 லட்சம் கோரியதாகவும், பல சந்தர்ப்பங்களில் தனக்கு ஹெரோயின் கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.