கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பம்! அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தீர்மானம்
கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசன் - பிரியா ஆகிய தமிழ் குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கான அனுமதியை வழங்கும் தீர்மானமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.
இது தொடர்பில் ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்டகாலம் நீடிக்கின்ற இந்த விடயத்தில் தலையிடுவது குறித்து குடிவரவு துறை அமைச்சர் சிந்தித்து வருகின்றார் தமிழ் குடும்பத்தினருக்கு விசா வழங்கப்படலாம் அல்லது விசாக்களிற்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படலாம்.
அரசாங்கம் என்ன தீர்மானத்தை எடுக்கவுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் சிரேஸ்ட அமைச்சர்கள் மத்தியில் சாதகமான தீர்வை காணவேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுவதாக ஏபிசி தெரிவித்துள்ளது.
சிரேஸ்ட அமைச்சர்களிற்கு அவர்களது சகாக்கள் இது தொடர்பில் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் என ஏபிசி தெரிவித்துள்ளது.
இதேவேளை பேர்த்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தருணிகாவுடன் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்துகொள்ள அனுமதிப்பது குறித்தும் குடிவரவு துறை அமைச்சர் ஆராய்ந்து வருகின்றார்.
மேற்கு அவுஸ்திரேலிய சுகாதார திணைக்களம் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் சிறுமியுடன் தங்கியிருக்க அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.