இலங்கை கடற்பரப்பில் மாயமான இரண்டு மீனவர்கள் மீட்பு! ஒருவர் மாயம்
தலைமன்னார் பியர் பகுதியில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்று காணாமல்போன மீனவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் பியர் கடற்கரை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல்போன நிலையில், அவர்களில் இரு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடற்படையினரால் மீனவர்கள் மீட்பு
கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி தலைமன்னார் பியர் மீன்பிடிதுறையில் இருந்து கண்ணாடி இழைப்படகில் மூன்று மீனவர்கள் மதியம் 12 மணி அளவில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
குறித்த கடல் பகுதியில் படகில் இருந்து வலையை விடும் சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்துள்ளது.
இதன்போது, மீனவர்கள் மூவரும் கடலில் வீழ்ந்து தத்தளித்து நீரில் மூழ்கிய படகைப்பிடித்தவாறு மீனவர்கள் நீண்ட நேரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று மீன்பிடி தொழிலுக்காக வந்திருந்த இந்திய இழுவைப் படகின் உதவியுடன் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்டு கச்சதீவு கடற்கரையினை அண்மித்த தூரத்தில் இறக்கி விடப்பட்ட நிலையில், மீனவர்கள் கச்சத்தீவு கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு இரு மீனவர்களையும் மீட்ட கடற்படையினர் சிகிச்சை வழங்கிய நிலையில், சக மீனவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், தலைமன்னார் கிழக்கு கேபிள் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராஜி ஜெனாத் (வயது 27) மற்றும் ராஜ மூர்தி மோகன்ராஜ் (வயது 50) ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், அதே பகுதியை வதிவிடமாக கொண்ட (ராசதுரை ராஜசேகர் வயது 52.) என்ற மீனவர் காணாமல்போயுள்ளார்.



