தயாசிறியின் கோரிக்கைக்கு அமைவாகவே நானாட்டான் பாதீடிற்கு ஆதரவு வழங்கினேன் - பெனடிக்ட் ஜக்கோபிள்ளை
இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் (Dayasiri Jayasekara) கோரிக்கைக்கு அமைவாகவே நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கியதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் பெனடிக்ட் ஜக்கோபிள்ளை (Benedict Jacopillai) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நானாட்டான் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எமது கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கடந்த 9-12-2021 அன்று காலை 9 மணியளவில் எனக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நானாட்டான் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு என்னிடம் கூறினார்.
அதனால் நான் இந்த வரவு செலவு திட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தேன்.
ஆனால் எதிர்க் கட்சியினர் என்னை ஒரு கொலையாளியை போன்று இரண்டு நாட்களாக மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை பாவித்தும், தேடியும் வந்தனர்.
ஆகவே என்னை எவரும் கடத்தவில்லை. மறைத்து வைக்கவும் இல்லை. எனது கிராமமான கற்கிடந்த குளத்தில் எனது நண்பனின் வீட்டில் தான் இருந்தேன்.என்னை எவரும் அச்சுறுத்த வில்லை.
நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிகமான ஒரு வாக்கினால் 9 வாக்குகள் பெற்று நிறைவேறியுள்ளது.
ஆதரவாக தலைவர் உள்ளிட்ட 7 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளடங்களாக 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தவிசாளரின் மேலதிக வாக்கினால் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.