இந்திய கடற்றொழிலாளர்களை தடுப்பது தொடர்பில் முக்கிய அவசர கோரிக்கை - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகு மூலம் ஊடுருவி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தயாராகும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை தடுப்பதுடன், இலங்கை கடல் வளங்களை பாதுகாத்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், இன்று(11.06.2026) மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜூன் 15ஆம் திகதி எதிர்பார்க்கப்படும் இலங்கை எல்லை கடற்பரப்பில் தமிழ்நாட்டின் இழுவைப் படகுகளால் மீண்டும் தொடங்கபடவிருக்கும் எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த மற்றும் அவசரமான கவலையை வெளிப்படுத்துகிறோம்.

பல ஆண்டுகளாக, குறிப்பாக சட்டவிரோத அடிமட்ட இழுவை கடற்றொழில் முறைகள் சம்பந்தப்பட்ட இத்தகைய அழிவுகரமான ஊடுருவல்கள், இலங்கையின் கடல் சூழல் அமைப்புகளுக்கு கடுமையான மற்றும் சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவை முக்கியமான கடல் உணவு இருப்புகளை குறைத்ததோடு, குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
சட்டவிரோத கடற்றொழிலை தடுப்பது அவசியம்
மேலும் சரி செய்ய முடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்னர், இந்த சட்டவிரோத ஊடுருவல்களை தடுத்து நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் வளங்களை பாதுகாக்க ஜனாதிபதி கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளும் உடனடி தீர்க்கமான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை வட மாகாண மீனவ சமூகம் மரியாதையுடனும் உரியது உறுதியுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த அழிவுகரமான மீன்பிடி முறைகள் எளிதில் பாதிப்படைய கூடிய கடலடி தளங்களையும் கடல் வாழ்விடங்களும் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் மீன்பிடித் தொழிலின் நிலைத்தன்மையும் அடிப்படையாக சீர்குலைக்கின்றன.
மேலும் உலகச் சந்தைகளுக்கு தரமான கடல் உணவு வழங்கும் நாட்டின் திறனையும் நேரடியாக பாதிக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் தற்போதுள்ள அமெரிக்க தீர்வைகள் மற்றும் பிரிவு 301 நடவடிக்கைகளின் கீழ் கூடுதலாக 12.5% தீர்வை விதிக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் அதிகரித்து வரும் அழுத்தங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர் என்றார்.