திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் திருடிய நபர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை, மொரவெவ பகுதியில் விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை, மொரவெவ கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக விவசாயி ஒருவர் சென்றபோது, அவர் திணைக்கள வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையே சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை குறித்து அதன் உரிமையாளரால் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டுகள்
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்ததுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை, வில்கம் விகாரை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், இவருக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் ஒரு பழைய குற்றவாளி எனவும் மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மொரவெவ பொலிஸார் நேற்று (04) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர். இதன்போது வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.