சிவப்பு அரிசி விற்பனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடி
சிவப்பு அரிசியில் வெள்ளை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்று வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பற்றாக்குறை
சந்தையில் சிவப்பு பச்சை அரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள், இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதற்கமைய, இந்த விடயம் குறித்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை குறிவைத்து சோதனைகளை நடத்த ஆணையகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதுடன் மட்டுமல்லாமல், விலை விதிமுறைகளை மீறும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கையையும் ஆணையகம் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்வதைத் தடுக்க சுமார் 140 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்படி, கம்பஹா பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது, அதிக விலைக்கு அரிசியை விற்றதாகக் கண்டறியப்பட்ட ஒரு பல்பொருள் அங்காடிக்கு 1 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல் - Indrajith
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |