தலைமன்னாரில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள்
இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த தேடுதல் நடவடிக்கையானது இன்று (16.10.2023) மேற்கொள்ளப்பட்டடுள்ளது.
இதன் போது 4 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், ஒரு கிலோ ஹெரோயின் மற்றும் 5 கிலோவுக்கும் அதிகமான ஹாசிஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை
மேலும், தலைமன்னார் கிராம கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்துள்ளனர்.
குறித்த படகிலிருந்து சுமார் 4 கிலோ மற்றும் 194 கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் நான்கு பொதிகளும்,ஒரு கிலோ மற்றும் 34 கிராம் எடையுள்ள ஹெராயின் பொதியும், சுமார் 5 கிலோ மற்றும் 254 கிராம் எடையுள்ள ஹாசிஸ் 5 பொதிகளும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 94 மில்லியன் என கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

