கருங்கற்களுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் முதிரை குற்றிகள் மீட்பு
வவுனியா - புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை இன்று பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் மரக்கடத்தல் நடவடிக்கை இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்றைய தினம் அதிகாலை அங்கு சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது கருங்கற்களுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் முதிரை குற்றிகளைக் கடத்திச்செல்ல முற்பட்டமை தெரியவந்துள்ளது.
பொலிஸாரை கண்டதும் மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும், 43 முதிரைக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதுடன், தப்பிச்சென்றவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து
வருகின்றனர்.