காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!
வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் நாவலப்பிட்டி கடியன்லென பிரதேசத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் நீர் தேக்க அணை ஒன்றுக்கு அருகில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டத்தில் வசித்து வந்த ஜே. பிலோமினா என்ற 73 வயதான பெண்மணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பெண்மணி நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் பிள்ளைகள் தோட்டம் முழுவதும் அவரை தேடியுள்ளனர்.
இதன் பின்னர், தோட்டத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் பள்ளத்தில் இருக்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் நீர் தேக்க அணைக்கு அருகில் காணாமல் போன பெண்மணி சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் உற்பத்தி நிலையத்தின் காவலாளி நீரணைக்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக அதனை நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.